Sunday, June 21, 2009

யோகிராஜ் வேதாந்திரி ம‌க‌ரிஷியின் ம‌ணிமொழிக‌ள்:


ம‌ன‌த்தை அட‌க்க‌ நினைத்தால் அலையும். ம‌ன‌த்தை அறிய‌ நினைத்தால் அட‌ங்கும்.

த‌வ‌றிழைப்ப‌து ம‌ன‌ம். இனித்த‌வ‌று செய்ய‌க்கூடாது என்று தீர்மானிப்ப‌தும் அதே ம‌ன‌ம் தான். ஆக‌வே த‌வ‌று செய்யாத‌ வ‌ழியைத் தேர்ந்து ந‌ட‌க்க‌ வேண்டிய‌தும் ம‌ன‌மே. ம‌ன‌த்தைப் ப‌ழைய‌ நிலையிலேயே வைத்துக் கொண்டு புதிய‌ ந‌ல்ல‌ வ‌ழியில் எப்ப‌டிச் செல்ல‌ முடியும். ம‌ன‌த்தின் குறைக‌ளைப் போக்கியாக‌ வேண்டும். ந‌ல்வ‌ழியில் தீர்மான‌மாக‌ நிற்கும் சுய‌ப‌ல‌த்தை ம‌ன‌த்திற்கு ஊட்டியாக‌ வேண்டும்.

தின‌ந்தோறும் ச‌மைய‌ல‌றையில் பாத்திர‌த்தை உப‌யோகிக்கிறோம். அதை சுத்த‌ம் செய்து வைத்தால் தானே ம‌று நாளைக்கு ந‌ன்றாக‌ இருக்கும். அது போல‌, தின‌ந்தோறும் நாம் ந‌ம்முடைய‌ வாழ்க்கையிலே ம‌ன‌தை அலைய‌ விட்டுக் கொண்டு அத‌னால் உட‌லையும் இன்னும் வாழ்க்கையில் உள்ள‌ ந‌ல‌ன்க‌ளையும் குழ‌ப்ப‌ம் செய்து கொள்வ‌தை மாற்றி, தின‌ந்தோறும் தியான‌த்தின் மூல‌ம் ம‌ன‌த்தைச் சுத்த‌ப்ப‌டுத்தி, ம‌ன‌த்தை அத‌ன் உண்மை நிலைக்குக் கொண்டு வ‌ந்து வைக்க‌ வேண்டும். அப்போது தான் ம‌ன‌ம் அமைதியாக‌ இருக்கும். சிந்த‌னைக‌ள் தெளிவாக‌ இருக்கும். த‌வ‌றில்லா வாழ்க்கை அமைத்துக்கொள்ள அதுவே உத‌வும்.

வாரியாரின் பொன்மொழிகள்


கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவிலிருந்து சில துளிகள்:

எங்கும் ஈஸ்வ‌ர‌ன் இருக்கின்றான் என்று நினை. எல்லாப்பொருள்க‌ளிலும் ஈஸ்வ‌ர‌னைப் பார். எல்லா உயிர்க‌ளும் இறைவ‌னுடைய‌ வ‌டிவ‌மே என்று உண்மையாக‌ எண்ண வேண்டும். அந்த‌ எண்ண‌ம் நின்ம‌ன‌தில் நிலைத்து நிற்க்குமாயின் உல‌கில் உன்னால் வெறுக்க‌த்த‌க்க‌ ம‌னித‌னாவ‌து, உயிராவ‌து, பொருளாவ‌து இல்லை, எல்லாப் பொருள்க‌ளிலும் இறைவ‌னைக் காணும் போது எதை வெறுக்க‌ முடியும்? வெறுப்பு நீங்கி விடுகிற‌து. விரோத‌ம் நீங்கி விடுகிற‌து. அவிரோத‌ ஞான‌ம் உண்டாகிற‌து. அப்போது சாந்த‌ நிலை தானே வ‌ந்து சேரும். சாந்த‌ வ‌டிவான‌ இறைவ‌ன் உன‌க்கு எங்கும் தோன்றிய‌ருள்வான்.

இறைவ‌னை எப்ப‌டி தேட‌ வேண்டும். வெறும‌னே அவ‌னைப்ப‌ற்றி அங்க‌லாய்த்துக் கொண்டிருந்தால் அவ‌னை அடைய‌ முடியுமா?.

ந‌ண்ப‌ர்க‌ள் இருவ‌ர் ஒரு மாந்தோட்ட‌த்துக்குள் சென்றார்க‌ள், ஒருவ‌ன் உட‌னே மாம‌ர‌ங்க‌ள் எத்த‌னை என்றும், ம‌ர‌த்திற்கு எத்த‌னை கிளைக‌ளென்றும், ஒவ்வொரு ம‌ர‌த்திலும் எத்த‌னைப் ப‌ழ‌ங்க‌ள் இருக்கின்ற‌ன‌வென்று எண்ணிக்கொண்டும், அத்தொட்ட‌த்தின் விலை எவ்வ‌ளவிருக்குமென்று ம‌திப்பிட்டும், அத்தோட்ட‌த்தை வை‌த்த‌வ‌ன் யார்? அவ‌னுக்கு ம‌க்க‌ள் எத்த‌னை? என்று விசாரித்துக் கொண்டும், அத்தோட்ட‌ம் எத்த‌னை அடி நீள‌ம்? அக‌ல‌ம் எத்த‌னை அடி? இவை முத‌லிய‌ன‌ ஆராய்ந்து கொண்டும் இருந்தான்.

ம‌ற்றொருவ‌ன் தோட்ட‌த்தில் நுழைந்த‌வுட‌ன் அத்தோட்ட‌த்தின் சொந்த‌க்கார‌னிட‌ம் சென்று அவ‌னை ந‌ட்பு கொண்டு அவ‌னுடைய‌ அனும‌தி பெற்று மெல்ல‌ ஒரு மாந்த‌ருவின் அடியிற் சென்று ந‌ன்கு க‌னிந்த‌க‌னிக‌ளைப் ப‌றித்துத்தின்று கொண்டு இன்ப‌த்தை அனுப‌வித்துக் கொண்டிருந்தான்.

இவ்விருவ‌ரில் யார் உய‌ர்ந்த‌வ‌ர் என்ப‌தைக் க‌வ‌னியுங்க‌ள். ம‌ர‌த்தையும் இலைக‌ளையும் எண்ணுவதால் ப‌ய‌னென்ன‌, ப‌சியை நீக்க‌வ‌ல்ல‌ ப‌ழ‌த்தைய‌ல்ல‌வா உண்டு ம‌கிழ‌ வேண்டும். அதுபோல‌, உல‌க‌த்தவ‌ர் ப‌ல‌ர் க‌ட‌லின் ஆழ‌ம் எவ்வ‌ள‌வு? உல‌கில் ம‌னித‌ர் எத்த‌னை கோடியுள்ள‌ன‌ர்? ஆணெத்த‌னை? பெண்ணெத்த‌னை? எந்த‌ பாஷை உய‌ர்ந்த‌து? உல‌க‌ந்தோன்றி எவ்வ‌ள‌வு கால‌மாயிற்று? ஏன் உல‌க‌ந்தோன்றிய‌து? இவை முத‌லிய‌ன‌ ஆராய்ந்து கொண்டே நாள் க‌ழிக்கிறார்க‌ள். ஒரு சில‌ர் ந‌ல்ல‌ குருநாத‌னை அடுத்து அவ‌ர‌ருளைப் பெற்று ஈஸ்வ‌ர‌ தியான‌ம் புரிந்து மெய்ஞ்ஞான‌ இன்ப‌த்தை நுக‌ர்கின்ற‌ன‌ர்.

உல‌க‌ நிக‌ழ்வுக‌ளை அறிவைக்கொண்டு ஆராய்ந்து குழ‌ம்பிக்கொண்டே இராம‌ல் அத‌ன் மூல‌த்தை நோக்கி ந‌க‌ர‌த்துவ‌ங்குவ‌தே ப‌க்குவ‌ம் ஆகும்.


Tuesday, June 16, 2009

சுவாமி விவேகான‌ந்த‌ரின் பொன்மொழிக‌ள்!

சீர்திருத்தவாதிகள், பகுத்தறிவு வியாதிகள் 'ஸாரி' வாதிகள் என்று தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்டு இந்து மதத்தை மட்டும் அவமதிப்பதில் அளவில்லாத பிரியம் கொண்டவர்களை சுவாமி விவேகானந்தர் சொற்பொழிவின் மூலம் சாடியதன் சாரத்தைப் பார்ப்போம்.

சென்னையில் நடந்த ஒரு சொற்ப்பொழிவின் போது சுவாமி விவேகானந்தர் இவ்வாறு உரையாற்றுகிறார் "சிறுவர்களே, மீசைமுளைத்த குழந்தைகளே, சென்னையைத் தாண்டிச்
செல்லாத நீங்கள் தைரியத்தோடு எழுந்து நின்று ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் பாரம்பரியத்தையுடைய முப்பது கோடி மக்களின் (அந்தக்காலத்தில்) முதுகில் பின்னால் நின்றுகொண்டு அவர்களுக்கு, சட்டத்தை அவர்கள் பின்பற்ற வேண்டிய சட்டங்களைக் கட்டளையிடுகிறீர்கள். இது உங்களுக்கு வெட்கமாக இல்லை. அத்தகையத் தெய்வ நிந்தனையிலிருந்து விலகி நில்லுங்கள். நீங்கள் படிக்க வேண்டியப் பாடத்தை முதலில் கற்றுக் கொள்ளுங்கள்.

புனிதமற்ற சிறுவர்களே, நீங்கள் வெறுமனே தாளில் சில வரிகளை எழுதி அதை வெளியிட சில முட்டள்களைக் கண்டுபிடித்து வெளியிடுவதாலேயே நீங்கள் இந்த உலகத்தின் கல்வி கற்றவர்கள் என்று நினைத்துக் கொண்டீர்களா? நீங்கள் தான் இந்தியாவின் பொதுமக்களின் கருத்து என்று நினைக்கின்றீர்களா?

நீங்க‌ள் தான் இந்தியாவின் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் என்று நினைத்துக் கொண்டீர்க‌ளா? இந்தியாவில் எந்த‌க் கால‌த்திலாவ‌து சீர்திருத்த‌க்கார‌ர்க‌ள் இல்லாம‌ல் இருந்த‌துண்டா? இந்தியாவின் வ‌ர‌லாற்றை நீங்கள் ப‌டித்திருக்கிறீர்க‌ளா? ச‌ங்க‌ர‌ர் யார்? ராமானுஜ‌ர் யார்? நான‌க் யார்? சைத‌ன்ய‌ர் யார்? க‌பீர் யார்? தாது யார்? ஒளிமிகுந்த‌ ந‌ட்ச‌த்திர‌க் கூட்ட‌ங்க‌ளின் வ‌ரிசைக‌ள் போல் ஒருவ‌ர் பின்னால் ஒருவ‌ராக‌ வ‌ந்த‌ இந்த‌ ம‌க‌த்தான ஆச்சாரிய‌ர்க‌ள் எல்லாம் யார்?

ராமானுஜ‌ர் தாழ்ந்த‌ குல‌த்த‌வ‌ர்க‌ளுக்காக‌ வேத‌னைப் ப‌ட‌வில்லையா? த‌ன் வாழ்நாள் முழுவ‌தும் ப‌றைய‌னைக் கூட‌ வைண‌வ‌ ச‌ம‌ய‌த்தில் அனும‌திக்க‌ப் பாடுப‌ட‌வில்லையா? த‌ன்னுடைய‌ ச‌ம‌ய‌த்தில் முக‌ம‌திய‌ர்க‌ளைச் சேர்த்துக்கொள்ள‌ அவ‌ர் முய‌ல‌வில்லையா? இந்துக்க‌ளோடும் முக‌ம‌திய‌ர்க‌ளோடும் உற‌வாடி ஒரு புதிய‌ நிலையைக் கொண்டுவ‌ர‌ நான‌க் முய‌ல‌வில்லையா? அவ‌ர்க‌ள் எல்லாம் முய‌ன்றார்க‌ள் அவ‌ர்க‌ளுடைய‌ ப‌ணி இன்னும் ந‌ட‌ந்து கொண்டே தானிருக்கிற‌து. வித்தியாச‌ம் இது தான். அவ‌ர்க‌ள் இன்றைய‌ச் சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல‌ எக்காளமிட‌வில்லை. இன்றைய‌ச் சீர்திருத்த‌க் கார‌ர்க‌ள் போல் அவ‌ர்க‌ளின் வாய்க‌ளில் சாப‌மே இல்லை. அவர்கள் யாரையும் இழிவு படுத்திப் பேசியதில்லை.

அவ‌ர்க‌ளுடைய‌ உத‌டுக‌ள் வாழ்த்துக்க‌ளை ம‌ட்டுமே கூறின‌. அவ‌ர்க‌ள் எந்த‌க் கால‌த்திலும் நிந்திக்க‌வில்லை. அவ‌ர்க‌ள் ம‌க்க‌ளிட‌ம் "இந்துக்க‌ளே, நீங்க‌ள் இதுவ‌ரை செய்த‌வை எல்லாம் ந‌ல்ல‌தே. ஆனால் என் ச‌கோத‌ர‌ர்க‌ளே, அதை விட‌ ந‌ல்ல‌தை நாம் செய்வோம்"
என்றே கூறின‌ர். இன்றைய‌ சீர்திருத்த‌க்கார‌ர்க‌ளைப் போல் "நீங்க‌ள் எல்லாம் கெட்டுப் போன‌வ‌ர்க‌ள். இப்போது நாம் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ முய‌ற்சிப்போம்" என்று சொல்ல‌வில்லை. அவ‌ர்க‌ள், "நீங்க‌ள் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாக‌ இருந்தீர்க‌ள். இப்போது மேலும் ந‌ல்ல‌வ‌ர்க‌ளாவோம்" என்றே கூறினார்க‌ள். இதுதான் இர‌ண்டு பேரிடையே அமைந்துள்ள‌ மிக‌ப் பெரிய‌ வித்தியாச‌ம்." என்றார் சுவாமி விவேகான‌ந்த‌ர்.

ராம‌சாமி நாய‌க்க‌ர் தோற்றுவித்த‌ இந்து ம‌த‌ ஒவ்வாமையை அது என்ன‌வென்றே ஆராயாம‌ல் அது தான் ப‌குத்தறிவு என்று மூட‌ந‌ம்பிக்கை கொண்டிருக்கும் த‌ற்க்கால‌ போலி சீர்திருத்த‌வியாதிக‌ள் 'ஸாரி' வாதிக‌ள் இந்த‌ ப‌குதிய‌ப் ப‌டித்தால் அல்ல‌து சுவாமி விவேகான‌ந்த‌ர‌து புத்த‌க‌த்தை யாரிட‌மாவ‌து ஓசிக்கு வாங்கி ப‌டித்தாவ‌து கொஞ்ச‌ம் உண்மையான ப‌குத்த‌றிவு‌ பெறுவ‌ர்க‌ளா என்று பார்ப்போம்.

சுவாமி விவேகான‌ந்த‌ரின் அறிய‌ புகைப்ப‌ட‌ம்!

Sunday, June 14, 2009

வள்ளுவர் வாக்கு


இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன் கண்விடல்

விளக்கம்: இந்தச் செயலை, இன்ன காரணத்தால் இவன் செய்து முடிப்பான் என்று கண்டுகொண்டு அந்தச் செயலை முடிக்கும் பொறுப்பை அவனிடமே விடவேண்டும்.

இது மேனேஜ்மென்ட் தியரி. எம் பி ஏ படிப்பில் ஹியூமென் ரிசோர்ஸ் பாடத்தில் தொழிளாலர்களிடம் உற்சாகம் குறையாமல் வேலை வாங்குவது எப்படி என்ற பகுதியில் ஒரு தொழிளாலர்க்கு எந்த மாதிரியான வேலை கொடுக்கப்பட்டால் அவர் உற்ச்சாகமுடன் அதைச் செய்கிறார் என்று கவனிக்க வேண்டும். அந்த வேலையையே அவருக்கு தொடர்ந்து கொடுத்து அதில் ஊக்கமளித்தால் நிறுவனப் பணிகள் சிறப்புடன் நடக்க அது சரியான மேளாலரின் முடிவாக இருக்கும். இவ்வாறு எம் பி ஏ படிப்பவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார்கள். ஆனால் அதற்க்கு அவர்கள் லட்சக் கணக்கில் செலவு செய்து இரண்டு வருடங்கள் படிக்க வேண்டும்.

இதையே திருவள்ளுவர் இரண்டடியில் ஏழு வார்த்தையில் நறுக்கென்று விளக்கி விட்டார். இதைப் படித்தால் வேலை கொடுக்க மாட்டார்கள். என்ன கொடுமைடா சாமி? உலகம் முழுவதும் தமிழையும் வள்ளுவரையும் பரப்ப வேண்டும். பாதிரியார்கள் மதம் மாற்றுவது போல உலக மக்களையெல்லாம் தமிழால் தமிழராய் மாற்ற வேண்டும். இருக்கும் வேத புத்தகங்களையெல்லாம் தூக்கியெறிந்து மக்கள் திருக்குறள் தான் தமது வேதம், திருவள்ளுவர் தான் ஒரே தெய்வம் என்று ஒட்டு மொத்த உலக மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். அந்த நாள் விரைவில் வரும் என்று எதிர்பார்ப்போம்.

பின்குறிப்பு: நான் என் குஜராத்தி நண்பனுக்கு திருக்குறள் சொல்லிக்கொடுக்க துவங்கி விட்டேன். வாய்பிளந்து இவவளவு விஷயம் அதில் இருக்கா என்று அவர் அதிசயித்துப் போவதை ரசித்து மகிழ்கிறேன். முடிந்தால் நீங்களும் ஒரு வேற்று மொழிக்காரருக்கு திருக்குறள் சொல்லித்தாருங்கள்.

வாழ்க தமிழ், வளர்க தமிழ்.

Friday, June 12, 2009

குற்றால அருவியில குளிச்சது போல் இருக்குதா?



குற்றால சீசன் துவங்கியது, குற்றாலத்தில் சாரல் துவங்கியது. சாரல் நின்று போனது. மீண்டும் சீசன் களைகட்டியது. மக்கள் வரிசையில் நின்று குளித்தனர் என்று மாறி மாறி செய்திகள் வருகிறது. வரிசையில் நின்று மக்கள் குளிப்பதைப் பார்த்தால் நமக்கும் ஏக்கம் வந்துவிடும்.

தெய்வீகக் குளியல் என்று பேர் வாங்கிய குற்றாலக் குளியலை குளிக்க ஆசைப்படாதவர்களே இருக்க முடியாது. தூரத்திலிருந்து வரும் போதே காணப்படும் பொங்குமாங்கடலும், மேலே தொட்டு தடவிச் செல்லும் அருவியின் சாரலும், தொப் என்று தலையில் விழும் தண்ணீருக்குள் எப்போது நுழைவோம் என்ற ஆவலைத் தூண்டிவிடும்.

ஆனால் சீசனுக்கு போய்க் குளிப்பதென்றாலே ஒரு வித அலர்ஜி வந்து விடுகிறது. வரிசையில் நின்று குளிக்க வேண்டும் என்பதில் துவங்கி கூட்டம் , நெரிசல் , போட்டி என்று எல்லாமே பிடிக்காத அம்சமாகிவிடுகிறது. அது மட்டுமில்லாமல் கூட்டங்களைக் கடந்து நெருங்கிச் சென்று அருவிக்கு கீழே நின்று தண்ணீர் முதுகில் பட வேண்டுமானால் கேள்விக்குறி போல கொஞ்ச நேரம் வளைந்து நெளிந்து நிற்க்க வேண்டும். முதலில் மற்றவர்கள் உடலில் பட்டு தெரிக்கும் தண்ணீரில் தான் நமது ஜலக்கிரீடை இருக்கும்.
பக்கத்தில் நிற்கும் பிரகஸ்பதி எந்த நிலையில் குளிக்கிறாரோ அந்த தீர்த்தம் தான் நம்மை முதலில் குளிப்பாட்டும். அவர் சோப்பு போட்டுக் கொண்டிருந்தால் அந்த சோப்புத்தண்ணி, எண்ணை தேய்த்து அப்போது தான் வந்தால் கொஞ்ச எண்ணையை நம்மீதும் வழிய விடுவார். அது எந்த கம்பெனி எண்ணையாக இருந்தாலும் ஐ எஸ் ஐ முத்திரையை ஆராய்ச்சி செய்யாமல் கொஞ்ச‌ம் அதையும் நம் மீது தெளித்துக் கொள்ள வேண்டும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி எங்கே நின்றால் தண்ணீர் நம் மீது நன்றாக விழும் என்பதை ஓரிரு முறை தண்ணீர் விழும் பகுதியை அந்நாந்து பார்த்து நிற்க்க வேண்டும். ஒரு உருவம் நகர்ந்து கரையேரியது என்பதைக் கண்டால் உடனே அந்த இடைவெளியில் நுழைந்து தலையைக் காட்ட வேண்டும். அப்போது தான் தலையில் குற்றாலத் தண்ணீர் தட தட வென்று தம்பட்டம் அடிக்க நிற்க்க முடியும்.


அப்பாடா இப்போதாவது இடம் கிடைத்ததே என்று நின்றால், அடுத்தடுத்து வரும் கூட்டம் நம்மை மூச்சு தினற உள்ளே தள்ளும். சரி போகட்டும் , கொஞ்ச நேரம் குளிக்கலாம் என்று மனசு லயிக்க நிற்க்க முடியாது. மூஞ்சிக்கு முன்னாடி ஒருத்தர், முதுகுக்கு பின்னாடி இன்னொருத்தர், பக்கவாட்டுகளில் பக்காவாக அனைகட்டிக் கொண்டு மற்றவர்கள் என்று நம் உடம்போடு உடம்பாக ஒட்டி ஈஷிக்கொண்டு நிற்ப்பார்கள். அப்படியே மாநகராட்சிப் பேருந்தில் குளித்துக் கொண்டே அலுவலகம் போவது போல ஒரு உணர்வு வந்து விடும். சே! இங்கே வந்து கூட பஸ்சுல போற‌மாதிரி நெரிசலா என்று நினைத்துக் கொண்டு கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி வெளியே நகர்ந்தால் நன்கு செய்யப்பட்ட நான்கு பீரோக்கள் டாஸ்மாக்கில் முங்கி எழுந்து ஆடிக்கொண்டே வரும்.

மூச்சு முட்டுகிறதே என்று நாம் கொஞ்சம் வெளியே தலை காட்டினால் போதும், இவன் குளித்து முடித்துவிட்டான் என்று அவர்களே முடுவுசெய்து விடுவார்கள். மப்பு செய்யும் வேகம் வேறு கூடி இருப்பதால் தீவிரவாதமாக உள்ளே நுழைந்து தம்பி கொஞ்சம் தள்ளிக்கோ...என்று உரிமையோடு நம்மை அருவியில் இருந்து பிய்த்து எடுத்து தள்ளி வைத்து விடுவார்கள். மூலிகை மருந்து நிறைந்த அருவியென்று ஆசையோடு குளிக்க வருபவர்கள் எல்லாம் டாஸ்மாக் மருந்து வாடையுடனேயே குளிக்க வேண்டியிருக்கும்.


மது அருந்தி விட்டு குளிக்ககூடாது ன்னு போடக்கூடாதா?

குடித்து விட்டு குளித்து விட்டு அது தெளியும் போது மீண்டும் குடித்து விட்டு மீண்டும் குளிக்கவந்து அடேயப்பா இப்படி தெளியத் தெளிய குடித்துக் குளிப்பதில் இவர்களுக்கு அலாதிப் பிரியம். குடித்ததாலும் குளித்ததாலும் கண்கள் சிவந்து இவர்கள் காணப்படுவார்கள். செக்கச் செவேலென்ற கண்களுடன் இவர்கள் அருகில் வந்து நம்மைப் பார்க்கும் போது பயந்து போய் நாமே நம்மை நகர்த்திக் கொள்வோம். அதிலும் இந்த கும்பல் எல்லாம் கூட்டமாகவே வருவதால் தொந்தியும் தொப்பையுமாக புல்டோசர்கள் புல்லோடில் வந்து நம் மீது உருளுவது போலவே இருக்கும். சாரய துர்நாற்றம் தாங்காமலே பல முறை குளியலை பாதியில் முடித்துக் கொண்டதுண்டு.

சில போதை ஜந்த்துக்கள் அப்படியே அந்த சிமென்ட் தடுப்பு மீது ஏறி மப்பில் பெண்கள் பகுதியில் குதிப்பதும் செய்திகளில் வரும் அளவிற்க்கு நடப்பதும் உண்டு.

தயவு செய்து குற்றாலத்தில் குடித்து விட்டு யாரும் குளிக்கக் கூடாது என்று சட்டம் போடுங்கப்பா. புண்ணியமாப் போகும்.



சீசன் மட்டும் இல்லாமல் எப்பொழுது போனாலும் நிம்மதியைக் கொடுப்பது குற்றாலநாதர் கோவில் தான். குற்றால நாதரையும், அம்பாளையும் தரிசித்து விட்டு அப்படியே பூரண புஷ்கலாம்பாள் சமேத தர்ம சாஸ்த்தாவையும் பிரார்த்தனை செய்து வந்தால் மனதுக்கு ஒரு நிம்மதி அடுத்த சீசன் வரை குடியிருக்கும்.

குற்றாலத் தண்ணீர் பல மூலிகைகளைத்தொட்டு தாங்கி வருவதால் ஒர் நல்ல மருந்து. தோல் வியாதிகள் அல்லது தோல் அலர்ஜி உள்ளவர்கள் ஒரு முறை குற்றாலத்தண்ணீரில் நன்றாக (முடிந்த வரை அடுத்தவர் தோல் மீது தேய்த்துக்கொண்டிருக்காமல்) குளித்து வந்தால் உடனே குணம் காணலாம். சொந்த அனுபவம் மூலம் சொல்கிறேன்.

குற்றாலத்தில் தண்ணீர் இல்லாமல் இருக்கும் காலத்தில் அந்தப் பிரம்மாண்டமான‌ பாறைகளைப் பார்த்தால் மிகவும் அற்புதமான காட்சியாக இருக்கும். ஓங்கி உயர்ந்த அந்தப் பாறைகளில் சிவலிங்கம் மற்றும் பல உருவங்களும் பொரிக்கப் பட்டிருக்கும். மேலே இருந்து விழும் தண்ணீர் பாறைகளில் வரையப்பட்டிருக்கும் சிவலிக்கத்திற்கு சுயமாகவே அபிஷேகம் செய்து அந்த அபிஷேகத் தண்ணீரே நம் மீது விழுவது போன்று செய்யப்பட்டிருக்கும். நினைத்தாலே தெய்வீகமான‌ ஒரு இடம் குற்றாலம்.

இப்படிப் பெருமைமிக்க குற்றால அருவி சுற்றுலாத் தலம் என்று சொல்லப்பட்டு இப்போது குடிகாரர்களால் கூத்தடிக்கப்படும் இடமாகவே மாறிவிட்டது. சாராய வாடையில்லாமல் குளிக்க முடியவில்லை.

தெய்வீக சிந்தனையும் கட்டுப்பாடும் இல்லாமல் எந்த ஒரு இடமும் முழுமையாகப் பாதுகாக்கப்படமாட்டாது. தெய்வீகமான குற்றாலத்தை புனிதத்தலமாக நினைக்காவிட்டாலும் குறைந்த பட்சம் குடிகாரர்கள் கூத்தடிக்கும் குளியலறையாக இல்லாமல் பாதுகாத்தாலாவது மற்றவர்கள் முகம் சுளிக்காமல் குளிக்க முடியும்.

ஆனால் இதை யார் செய்வது. இந்துத்தலம் என்றாலே கேட்பதற்க்கு நாதி கிடையாதே! என்ன செய்வது?. குற்றால நாதரே, நீரே காப்பீர்.


Wednesday, June 3, 2009

அவ்வைப்பாட்டியின் அருந்தமிழ் கேளீர்!

"அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா‍-தொடுத்த‌ 
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் 
பருவத்தால் அன்றிப் பழா"

ஓங்கி உயர்ந்த மரங்களாக இருந்தாலும், அம்மரத்தில் பழங்கள் பழுக்க வேண்டிய பருவம் வந்தால் தான் பழுக்குமேயன்றி எல்லாக் காலங்களிலும் பழுக்காது. அதுபோல ஒருவர் தொடர்ந்து முயற்சியுடன் ஒரு செயலைச் செய்து வந்தாலும் அது நிறைவேறும் காலம் வரும் போது தான் நிறைவேறும். ஒருவர் தொடங்கும் செயல் உடனே பலனளித்து விடும் என்று எதிர்பார்க்கக் கூடாது. முயற்சியைத் தொடர்ந்து செய்து வந்தால் உரிய காலத்தில் பயன் தானாகவே கிடைப்பது உறுதி என்று ஒளவைப்பாட்டி வலியுறுத்துகிறார்.

அதாவது நாம் முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும், நேரம் வரும் போது தானே முயன்ற காரியம் கைகூடும். இதையே தான் பகவான் ஸ்ரீக்ருஷ்னர் பலன்களைப் பற்றி கவலைப்படாமல் கடமையை ஆற்றுவதே உனது பணியாக இருக்கட்டும். அவை நிறைவேறும் தருணத்தை நான் அளிப்பேன் என்று உரைக்கிறார் கீதையில். இதையே பலனில்லாமல் கடமை செய்ய பகவான் சொல்லிவிட்டதாக அபத்தமாக அர்த்தம் கொள்வர் சிலர். உண்மையில் கீதையின் இந்த சாரத்தை அவ்வைப்பாட்டி மிகவும் எளிமையாக விளக்கியிருக்கிறார் என்றே கொள்ளவேண்டும்.