Saturday, December 19, 2009

விக்கிரமாதித்தன் கதைகள் - 10


தலையும் உடலும்

விக்கிரமாதித்தன் மீண்டும் முருங்கை மரத்தின் மீது ஏறிக்கொண்ட
வேதாளத்தைப் பிடிக்கச் சென்று, பெரும் போராட்டத்திற்கு பிறகு வசமாகப்
பிடித்துக் கொண்டான். தோளில் வேதாளத்தை சுமந்தபடி குகையை விட்டு
நடக்கத் தொடங்கினான்.

அவனது பராக்கிரமத்தை பார்த்து வியந்தாலும் வேதாளம் தான் தப்பித்து
கொள்வதற்கு வழி தேடிய வண்ணமே இருந்தது. அதனால் வேதாளம் மீண்டும்
ஒரு கதையை விக்கிரமாதித்தனுக்குச் சொல்லத்துவங்கியது.

விக்கிரமாதித்தா! உனக்கு ஒரு கதை சொல்கிறேன் கேள்!

முன்னொரு காலத்தில் பனாரஸ் நாட்டை சதுர்சன் என்ற அரசன் ஆண்டு
வந்தான். அவனுக்கு நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

அரன்மனையில் இருந்த துர்கா தேவியிடம் பல நாட்கள் இக்குறை நீங்க வேண்டி
பூஜை செய்து வந்தான். அந்த பூஜா பலனால் அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான்.
அவனுக்கு வஜ்ரவீரன் என்று பெயரிட்டான்.

வஜ்ரவீரன் வளர்ந்து பெரியவன் ஆனான். அவனுக்கு அரசவையின் சலவைத்
தொழிலாளியான ருத்ரராஜன் நண்பனாக இருந்தான்.

ஒரு முறை நண்பன் வீட்டிற்குச் சென்ற வஜ்ரவீரன் அவன் வீட்டருகே ஒரு
அழகிய பெண்ணை பார்த்தான். அந்த பெண் மீது மோகம் கொண்டு அவளை
மனமுடிக்க விரும்பினான். இதை தன் நண்பன் ருத்ரராஜனிடம் தெரிவித்தான்.

ஆனால் ருத்ரராஜனோ அந்தப் பெண்ணை ஒரு தலையாகக் காதலித்து வந்தான்.
இந்நிலையில் நாட்டின் யுவராஜனும் தனது நண்பனுமான வஜ்ரவீரன்
அப்பெண்ணை மணக்க விரும்பியதை அறிந்து வருந்தினான். ஆனால்
நண்பனுக்காக தன் ஒருதலைக் காதலை விட்டுக்கொடுக்க முடிவு செய்தான்.
அதனால் தனது விருப்பத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நண்பனுக்காக
விட்டுக் கொடுத்தான்.

ஆனால் வஜ்ரவீரனுக்கோ தனது தந்தை தன் விருப்பத்தை நிறைவேற்றுவாரா
என்று கவலை உண்டானது. அவன் துர்காதேவியிடம் சென்று "அம்மா துர்க்கா!
என் தந்தை நான் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து வைத்தால், வரும்
பௌர்ணமி தினத்தில் என் தலையை உனக்குக் காணிக்கையாக்குகிறேன்" என்று
வேண்டினான்.

தனது நண்பனின் மனக்கவலையை உணர்ந்து கொண்ட ருத்ரராஜன் அவனைத்
தேற்றினான். நண்பனுக்காக தானே அரசனிடம் சென்று விஷயத்தை கூறலானான். "அரசே! தங்கள் மகனும் எனது நன்பனுமான வஜ்ரவீரனுக்கு
சலவைத் தொழில் புரியும் ஒரு பெண்ணின் மீது விருப்பம் ஏற்பட்டிருக்கிறது.
அவன் அவளைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறான். தாங்கள்
அனுமதிப்பீரா என்ற தயக்கத்தில் இருக்கிறான். அதை தங்களிடம் தெரிவித்துப்
போகவே வந்தேன்" என்றான்.

மன்னனோ "என் மகனின் மகிழ்ச்சி தான் எனக்கு முக்கியம். அதனால் அவன்
விரும்பும் பெண்ணையே அவனுக்கு மணமுடித்து வைக்கிறேன்" என்றார்.

இதனைக் கேட்ட வஜ்ரவீரன் பெருமகிழ்ச்சி கொண்டான். பெரு விமரிசையாக
வஜ்ரவீரனுக்கும் அவன் விரும்பிய பெண்ணுக்கும் திருமணம் நடந்தது.

இருவரும் மகிழ்ச்சியாக வாழ்க்கையைத் துவங்கினர். இந்நிலையில் பௌர்ணமி
நாள் நெருங்கியது. வஜ்ரவீரனுக்கு துர்காதேவியிடம் தன் தலையை
காணிக்கையாக கொடுப்பதாய் வாக்கு கொடுத்தது ஞாபகம் வந்தது.

இனிமையான வாழ்க்கையை விட்டு பிரியவேண்டிய கட்டாயம் வந்தது. எந்தப்
பெண்ணோடு வாழ்வதற்க்காக பிரார்தனை செய்தானோ அந்தப் பெண்ணை
உடனேயே பிரியும் நிலை அவன் பிரார்த்தனையாலேயே உண்டானது.

மணமுடித்த பெண்ணோடு வாழ்வதா அல்லது துர்காதேவிக்கு கொடுத்த வாக்குப்
படி தன் தலையை காணிக்கையாக்கி சாவதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்தான்.

அன்று பௌர்ணமி. வஜ்ரவீரன் ஒரு முடிவெடுத்தான்...

No comments: