Sunday, December 9, 2012

ஜாதிகள் ஒரு சக்கர வியூகம்!


ஒரு பத்திரிக்கை இரண்டு செய்திகள்:

*** கவுண்டர் சமுதாயத்துக்குன்னு ஒரு பெரிய பாரம்பரியமும், மரியாதையும், கலாச்சாரமும் இருக்குதுங்க. ஆனா, காதல் மற்றும் கலப்புத் திருமணத்தால் எங்க சமுதாய அடையாளம் அநியாயத்துக்கும் அழிஞ்சுபோகுது. 'கவுண்டச்சியைக் கட்டுவோம், கவுண்டனை வெட்டுவோம்' னு சூளுரையோட செயல்படுறாங்க குறிப்பிட்ட சில சமூகப் பசங்க. காதல், சாதி மறுப்புத் திருமணம்னு தடம் மாறிப் போயி சீரழிஞ்ச எங்க பொண்ணுங்களோட எண்ணிக்கை கொத்துக்கொத்தாக் கிடக்குதுங்க. எதையும் ஆதாரம் இல்லாம நான் சொல்லலை. இந்த வருஷத்தில் (2012) இதுவரை 936 கவுண்டர் சமுதாயப் பெண்கள், தலித் பையன்களைத் திருமணம் செய்து இருக்காங்க. அதில், 716 திருமணங்கள் மணமுறிவை சந்திச்சிருக்குது. 12 பொண்ணுங்க தற்கொலை செய்திருக்காங்க, 36 பெற்றோர் தற்கொலை செய்திருக்காங்க" - கொங்கு வேளாளக் கௌண்டர்கள் பேரவை அமைப்பின் மாநிலத்தலைவர் மணிகண்டன்.

*** "தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் பார்ப்பனரால் கலவரம் தூண்டப்படுவது இல்லை. எந்தப் பார்ப்பனரும் 'தீண்டாமைச் சுவர்' எழுப்புவது இல்லை. எல்லா இழிவுகலையும் அரங்கேற்றுபவர்கள் சாதி இந்துக்களாக வலம் வரும் பார்ப்பனர் அல்லாதோர் திருக்கூட்டமே. ஆனால், பழக்க தோஷத்தில் பெரியார் இயக்கங்கள் 'பார்ப்பன ஆதிக்கம்' என்ற பழைய பஞ்சாங்கத்தையே புரட்டுகின்றனர்". - தமிழருவி மணியன்

ஜூனியர் விகடன் - 28.11.2012

ஜாதிகள் அழிந்தால் என்ன ஆகும்? ஒரு அலசல்!




'ஜாதி முழுதாக அழிந்தாலொழிய, கிறிஸ்தவ மதமாற்றாத்துக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை' - ராபர்ட் கால்டுவெல் சொன்னது!

கால்டுவெல்லின் மதமாற்ற முயற்சியும் அதன் பொருட்டு உண்டான பல புரட்டுக்கள் பற்றியும் 'உடையும் இந்தியா' புத்தகத்தில் திரு. அரவிந்தன் நீலகண்டன் அவர்கள் பல்வேறு தரவுகளுடன் விளக்கி இருக்கிறார்.

இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு சமூகம் என்பது விருக்ஷம், அதன் ஆணிவேர் மதம், அடிவேர்களாக மன்னோடு மன்னாக ஒட்டிப்பிடித்து உறவாடிக் கொண்டிருப்பது ஜாதிகள். மதங்கள் கூறும் தத்துவங்களை, காலச் சூழல் மற்றும் புவியியல் சார்ந்த வாழ்க்கை மற்றும் வழிபாட்டு முறையையும் உள்ளடக்கியது தான் இந்த ஜாதீய வாழ்க்கை முறை.

இந்த ஜாதிகளும் அந்த ஜாதியினருக்குள்ளே இருக்கும் சமூகக் கட்டுப்பாடுகளும், அந்த மக்களின் வாழ்க்கைச் சூழலை உடைத்து பிறர் உள்ளே வந்துவிடாத ஒரு சக்கர வியூகமாக செயல்பட்டு வருகின்றது. அப்படி இறுக்கமாக இருக்கும் தனித்தனிக் குழுக்களை உடைத்து உதிரிகள் ஆக்காமல் அவர்களை ஆளுக்கொரு மதத்திற்கு மாற்ற முடியாது என்பதை புரிந்து கொண்டான் கால்டுவெல் என்பது இங்கே தெளிவாகத் தெரிகிறது. லட்டுவை உடைத்து பூந்தியாக்கினால் தானே பலரும் பகிர்ந்து கொள்ள முடியும். அதனடிப்படையில் எழுந்தது தான் ஜாதி ஒழிப்பு கோஷங்கள். ஆனால் வரட்டுத் தனமாக திராவிடம் பேசும் சமூகப் போலிகள் ஜாதி ஒழிப்பு என்பதை அரசியல் ஆதாயத்திற்காக கையிலெடுத்து சமூகத்தின் அடித்தட்டு வாழ்க்கை முறைகளை அடியோடு சிதைக்க முயற்சிக்கின்றனர். 

வெளிநாடுகளிலெல்லாம் கூட ஜாதிகள் இருக்கின்றன. பல்வேறு பெயர்களில் பிரிவுகள் உள்ளன. ஆனால் அவைகளெல்லாம் ஒருவரை ஒருவர் அடிமைப்படுத்தவும் ஒருவர் செல்வங்களை பிறர் அபகரித்துக் கொள்வதற்குமே உருவானவையாக இருக்கும். ஆனால் பாரதத்தைப் பொருத்தவரை இங்கே இருக்கும் ஜாதிச் சமூகங்கள் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்வதற்காக உருவானவை. ஒரு இனத்தவர் இல்லாமல் போனால் பிரிதொருவர் வாழ்க்கை முறையை அது பாதிக்கும் என்னுமளவிற்கு நெருக்கமான சார்பு நிலை கொண்ட ஒரு சங்கிலிப் பிணைப்புள்ள சமூகமாக இருந்திருக்கிறது. அத்தகைய சமூகம் இந்த பெரிய சமுதாயத்தின் அடிவேர். அடிவேரான ஜாதிகள் பிடுங்கி எறியப்பட்டால், ஆணிவேராகிய மதம் தனியாக சமூகம் என்கிற விருக்ஷத்தை தாங்காமல் ஒடிந்து விடும். அப்படியே சாயும் சமூகத்தை கிறிஸ்தவம் என்கிற மாயையால் முட்டுக் கொடுத்து மதம் மாற்றிவிடலாம் என்பது தான் ராபர்ட் கால்டுவெல்லின் கணிப்பு.



அதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளாமல் ஜாதியினை ஒழிப்போம் என்று மிஷனரிகளுடன் கைகோர்த்து சமூகச் சங்கிலிப் பிணைப்பை உடைத்தெரிந்து சமூகத்தின் போக்கை மூர்கத்தனமாக சீர்குலைக்க விளைகின்றனர் முற்போக்குவாதிகள் என தங்களைக் கூறிக்கொள்பவர்கள்.

ஜாதியத்தில் இவர்கள் கூறும் ஒரே குற்றச்சாட்டு அவற்றில் அடுக்குமுறைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இருப்பதைத் தான். அப்படிப்பட்ட அடுக்குமுறைகள் இல்லாத அமைப்புகளே உலகில் கிடையாது. கம்யூனிஸ கட்சி என்றாலும் ஒருவர் மட்டும் தான் தலைவராக இருப்பார். அதுவே அடுக்குமுறையின் உச்சம் தானே! மனிதச் சமூகமும் அப்படித்தான். ஆனால் அது காலத்தேவைகளுக்குத் தகுந்தவாறு இடம் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. அத்தகைய மாற்றங்கள் சமூக அழுத்தத்தின் அகக்காரணங்களைக் கொண்டு தானாக நடந்துவிடும். நாம் பொருளாதார ரீதியான சமத்துவத்தை அனைவருக்குமாக வழிவகுக்க வேண்டுமே அன்றி சமூக வாழ்க்கையின் பாரம்பரிய முறைகளை சீர்குலைக்கக் கூடாது. ஒருவரை ஒருவர் கீழாக நினைக்கும் போக்கு மாற வேண்டும் என்றெண்ண வேண்டுமே ஒழிய ஒருவரின் வாழ்க்கை முறையை ஒழித்து இன்னொன்றைப் புகுத்துவோம் என்று எண்ணுதல் கூடாது.

நாம் சீண்டாமல் இருந்தால் காலம் அதனைச் சத்தமில்லாமல் செய்யும்!

அடுக்குமுறைகளைக் காலம் மாற்றியமைத்திருப்பதைப் பாருங்கள்! 

சமூக அடுக்கில் மேலாக கருதப்படுபவர்கள் பொருளாதார அடுக்கிலும் மேலாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை! இன்றைய பணப்பொருளாதாரக் காலச்சூழலில் இது நிதர்சனம்!

கொசுறு:

"உண்மையான கடவுள் குறித்த அறிவை, புராதன இந்தியர்கள் கொண்டிருந்தனர். அதை உன்னதமான தெளிவான, ஆடம்பரமான மொழியில் அறிவித்தனர். அதிக ஒளியுடன் திகழும் இந்த தத்துவங்களின் முன் ஐரோப்பியர்களின் உயர்ந்த தத்துவங்களும், கிரேக்கர்களின் தர்க்கங்களும், மதிய நேரத்து சூரிய ஒளியின் முன் பிரகாசிக்கும் நட்சத்திரங்களாக உள்ளன."

- ஜெர்மன் எழுத்தாளர், பிரெடெரிக் வான் ஷ்லீகல் (1772-1829) ; - நன்றி: தினமலர்

No comments: