Sunday, June 17, 2012

விரதங்களும் நன்மைகளும் - 1



மனிதன் என்பவன் மற்ற எல்லா ஜீவராசிகளையும் போல இயற்கைத்தாயின் கருப்பைக்குள் இருக்கும் சிறிய அணு தான். இயற்கையின் இறுக்கமான தாக்கத்திலிருந்து மனிதன் என்றும் விடுபட்டுவிட முடியாது. விஞ்ஞானத்தாலும் அதனை சாதிக்க முடியாது. நம் உடல் இந்த பூமி மற்றும் பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் மற்ற கிரகங்களின் ஆதிக்கத்தையும் பொறுத்தே தன் இயக்கத்தை நடத்துகிறது. 

கிரகங்களின் தாக்கம் இல்லையென்றால் நம் உடற்சுழற்சியே மாறுபட்டு விடும். அவற்றை நன்றாகப் புரிந்து கொண்டிருந்த நம் முன்னோர்கள் கிரகங்களின் சுழற்சிக்க்கேற்ப உடலில் ஏற்படும் மாறுபாட்டை உணர்ந்து கொண்டார்கள். கிரகங்களின் தாக்கத்திற்கு வளைந்து கொடுத்து வாழத்துவங்கினார்கள். அதன் ஒரு பகுதி தான் விரதங்கள்.

விரதங்களில் பல வகைகள் உண்டு. அவற்றில் முக்கியமானவை உண்ணாமல் இருக்கும் விரதம், பேசாமல் இருக்கும் மௌன விரதம், ஒரு நாள் முழுவதும் உப்பில்லாமல் சாப்ப்டும் விரதம் போன்றவைகள் ஆகும்.

முதலில் உண்ணா விரதம் பற்றி பார்ப்போம். ஒரு குறிப்பிட்ட நாளில் அந்த நாளின் தன்மைக்கேற்ப நீர்மமாகவோ, கூழாகவோ, அல்லது காலையில் மட்டும் உண்டு மற்ற நேரங்களில் நீர்மமாகப் பருகி வயிற்றுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் இருக்கும் விரதம்.

காரணம் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆவதற்கு புவி ஈர்ப்பு விசை முக்கியக் காரணம். புவிஈர்ப்பு விசையினால் ஏற்படும் கீழ் நோக்கிய அழுத்தம் இல்லையென்றால் நம் உடற்கழிவுகள் வெளியேறவே செய்யாது. ஆக வயிற்றிலிருக்கும் உணவு செரிப்பதும், கழிவுகள் வெளியேறுவதும் புவி ஈர்ப்பு விசை சார்ந்தே இருக்கிறது.

வீட்டுப் பெரியவர்கள் முக்கியமாக விரதம் இருக்கும் நாள் ஏகாதசி. குறிப்பிட்ட இந்த நாளில் என்ன விஷேஷம் என்று தோன்றலாம். இந்த குறிப்பிட்ட நாளில் புவி ஈர்ப்பு விசை அதிகமான இருக்கும் நாளாக கருதப்படுகிறது. காரணம் சூரியனிலிருந்து சந்திரன் அதிக தூரம் விலகி வரும் நாட்களில் பூமியில் அதன் ஈர்ப்பு சக்தி அதிகரிப்பதாக விஞ்ஞானம் கூறுகிறது.

உதாரனமாக அமாவாசையிலிருந்து ஒவ்வொரு நாளும் 12 டிகிரி தூரம் சந்திரன் சூரியனிலிருந்து விலகுகிறது. அவ்வாறு தினம் தோறும் பிரிந்து அமாவாசையிலிருந்து 11 ஆம் நாளான ஏகாதசியன்று சூரியனிலிருந்து சந்திரன் 132 டிகிரியில் விலகியிர்ப்பதால் அந்நாளில் பூமியில் குறிப்பிட்ட அளவு புவியீர்ப்பு விசை அதிகரிக்கிறது என்கிறார்கள். 

ஆக புவியீர்ப்பு விசை அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடலில் ஜீரண மண்டலம் அதிக கீழ் நோக்கிய விசையால் ஈர்க்கப்படும். உண்ணும் உணவை செரிமானம் செய்யும் பொருட்டு அதிகமான விசையுடன் இயங்கும். அந்த நாளில் நாம் அதிகமாக உணவு உட்கொண்டால் ஈர்ப்பு விசையின் வேகத்திற்கு உணவு செரிக்காமல் அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம். வாயுத்தொல்லைகள் பெருகலாம்.

என்றைக்கும் ஒரே மாதிரியான உணவு உட்கொண்டாலும் ஒரு சில நாட்களில் நம்மை அறியாமல் வயிற்றுக்கு உபாதைகள் நேர்வதை நில நேரங்களில் நாம் உணரமுடியும். வித்தியாசமாக எதுவும் சாப்பிடவில்லை, ஆனாலும் என்னவோ வயிறு சரியில்லை என்று உணவைத் தவிர்க்க நேரிடும். காரணம் இது போன்ற சில நாட்களை நாம் கவனத்தில் கொள்ளாமல் எல்லா நாட்களிலும் ஒரே மாதிரியாக உணவை உள்ளே தள்ளுவதால் நாளடைவில் உண்டாகும் வயிற்றுக் குறைபாடாக அது தெரியவருகிறது.

ஆகையால் நம் செரிமான மண்டலங்களுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுக்கும் விதமாகவே ஏகாதசி போன்ற நாட்களில் உண்ணா நோன்பாகவோ அல்லது நீர்மமாகவோ , கூழ்மாமாகவோ மட்டும் உணவருந்தி வயிற்றையும் செரிமான உறுப்பையும் பாதுகாக்கும் ஏற்பாட்டை நம்முன்னோர்கள் செய்து வந்திருக்கிறார்கள் எனலாம். இயந்திரங்களை அவ்வப்பொழுது கழுவி சர்வீஸ் செய்வது போலே வயிற்றுக்குள் உணவு போடாமல் கழுவி செய்யப்படும் சர்வீஸ் எனக்கொள்ளலாம்! உடலும் ஒரு இயந்திரமே! அதற்கும் முறையான சர்வீஸ் தேவை. அத்தகைய 'periodical service' தான் விரதங்கள்!

ஆனால் ஒரு விஷயம், எதைத் தின்றாலும் செரிமானம் ஆகிவிடும் அளவு உடல் உழைப்பைக் கொண்டிருக்கும் மனிதர்களுக்கு ஏகதசியாவது, அமாவாசையாவது!


No comments: