Monday, June 11, 2012

வீட்ல விஷேஷங்க!





"வீட்ல விஷேஷங்க! ஃபங்க்ஷன் வெச்சிருக்கோம்! அவசியம் உங்க குடும்பத்தோட வரனும், குழந்தைகளையும் கூட்டிட்டு வாங்க!" என்று நம் உறவினர்கள் அவர்கள் வீட்டு விஷேஷங்களுக்கு அல்லது சுபகாரியம், பூஜைகளுக்கெல்லாம் வீடு வந்து அழைத்து விட்டு செல்வதுண்டு.


பெரும்பாலும் குடும்ப விஷேஷங்களுக்கு வீட்டுப் பெரியவர்கள் மட்டுமே வருவது வழக்கமாகி விட்டது. வீட்டுக் குழந்தைகளை கூட்டிக்கொண்டு வருவதே இல்லை. கேட்டால் 'அவளுக்கு டியூஷன் இருக்கு, அவனுக்கு ஹிந்தி க்ளாஸ் இருக்கு, அவன் ஸ்விம்மிங் போயிருக்கான், அவள் யாரோ ப்ரண்டு பர்த் டேன்னு போயிருக்கா' என்று பெரும்பாலும் ஏதாவது காரணங்களை நம் உறவுக்காரர்கள் கொடுக்கிறார்கள்.

விஷேஷங்களுக்கு குழந்தைகள் வந்து என்ன செயப் போகின்றன என்கிற அலட்சியப் போக்கு ஒரு காரணம்! நான் மட்டும் போய் தலையைக் காட்டிவிட்டு வந்து விடுகிறேன் என்று பெரியோர்களில் யாரேனும் ஒருவரோ அல்லது இருவரோ சென்று வருவார்கள்.

நம் கலாச்சாரம் சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகளிலும் கோவில் திருவிழாக்களிலும் மட்டும் இருப்பதில்லை. ஒவ்வொருவர் வீட்டிலும் நடக்கும் சின்னச் சின்ன சுபகாரியங்கள் பூஜைகள் அல்லது ஏதாவது ஒரு விஷேஷ நிகழ்ச்சிகளிலும் அடங்கி இருக்கிறது. நம் வீட்டில் வளரும் குழந்தைகள் அது போன்ற நிகழ்ச்சிகளுக்கு முடிந்தவரை கலந்து கொள்ளும் போது அவர்கள் தங்கள் குடும்ப கலாச்சாரத்தையும் பாரம்பரியத்தையும் உணர ஒரு வாய்ப்பாக அமைகிறது. அது மட்டுமல்லாமல் தங்கள் குடும்பத்தில் உள்ள உறவினர்களுடன் பாசத்துடன் பழகும் குணமும் பலரது அறிமுகமும் கிடைக்கிறது. இதனால் வளரும் குழந்தைகளுக்கு மனோரீதியான ஒரு உற்சாகம் எப்போதும் கூடவே இருக்கும். ஆனால் பெரும்பாலான குடும்ப நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகள் வருவதென்பதே ஏறக்குறைய இல்லை என்றே ஆகிவிட்டது.

அது மட்டுமல்லாமல் பிள்ளைகள் அங்கே வந்து என்ன செய்யப் போகிறார்கள் என்கிற அலட்சிய மனப்பான்மையும் இருக்கிறது. உறவினர்கள் வீடுகளில் சின்ன சின்ன விஷேஷங்கள் சுப காரியங்கள் என்று ஏதாவது இருந்தாலும் வீட்டுப் பிள்ளைகளை குழந்தைகளை கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும். உறவினர்களுடன் குழந்தைகள் அதிக நேரம் செலவழிக்க மாதம் ஒருமுறையேனும் அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இல்லையேல் சொந்த சித்தப்பா, சித்தி, அத்தை, மாமா உறவுகள் கூட அவர்களுக்கு அந்நியமாகப் போய்விடுகிறது. ஒன்று விட்ட சகோதர சகோதரி உறவுகள் அறிமுகம் இல்லாமலேயே வாழ்க்கை சென்று விடுகிறது. இது குடும்பம் என்கிற சங்கிலிப் பிணைப்புக்கு பாதிப்பாகிறது.

அந்த குடும்பம் என்கிற ஆதாரத்தால் இயங்கும் கலாச்சாரத்திற்கும் கேடு விளைவிக்கிறது. அதனால் குழந்தைகளை அடிக்கடி உறவினர்கள் வீட்டு விஷேஷங்களுக்கு அழைத்துச் செல்லுதலை வலியுறுத்த வேண்டும். கலாச்சார பாரம்பரியத்தை காக்கப் போவது அடுத்த தலைமுறை பிள்ளைகள் அல்லவா! அனைவரும் அதனை உணர்ந்து நம் பாரம்பரிய குடும்ப உறவு முறைகளைக் காக்க வேண்டும். நம் மக்கள் மனது வைத்து செய்வார்கள் என்று நம்புவோமாக!

No comments: